தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின் ரவிச்சந்திரன் தனது யூ-ட்யூப் பக்கத்துக்காக இயக்குநர் கே.பாக்யராஜை சில தினங்களுக்கு முன்பு பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் தனது திரைப்படங்கள் குறித்த பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துள்ளார் பாக்யராஜ். மேலும் அப்பேட்டியில் தனது மகன் சாந்தனு குறித்தும் மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சாந்தனுவுக்கான நேரம் நன்றாக இருந்தால் அவர் நன்றாக வந்துவிடுவார். முதல் படமான ‘சக்கரக்கட்டி’யில் சில மாற்றங்களை நான் சொல்லியிருக்கலாம். ஆனால் என் மகன் நடிக்கும் படம் என்பதால் நான் உள்ளே வந்துவிட்டேன் என்று சொல்லிவிடுவார்களோ என்று பெரிதளவில் அப்படத்தில் நான் தலையிடவில்லை. அதையும் தாண்டி மேம்போக்காக சில விஷயங்களை சொன்னேன். ஆனால் இயக்குநர் பிரபு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அதையெல்லாம் சேர்க்கவில்லை. படம் தோல்வியடைந்து பல நாட்களுக்குப் பிறகு என்னிடம் வந்து நீங்கள் சொன்னது போல செய்திருக்கலாம் என்று சொன்னார்.
அதே போல ‘சுப்ரமணியபுரம்’ வாய்ப்பு முதலில் சாந்தனுவுக்கு தான் வந்தது. எனக்கு கதை பிடித்து நான் ஓகே சொல்லிவிட்டேன். ஆனால் அதற்கு முன்பாகவே சக்கரக்கட்டி படத்திற்கு ஒப்பந்தம் ஆகி, தாணுவும் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களை வைத்து தாணு பெரியளவில் விளம்பரம் எல்லாம் செய்திருந்தார். பாக்யராஜ் வாக்கு கொடுத்துவிட்டு காப்பாற்றவில்லை என்ற கெட்ட பெயர் ஏற்படுமே என்று பயந்து வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எனவே ‘சுப்ரமணியபுரம்’ பட வாய்ப்பு சாந்தனுவிடமிருந்து நழுவிச் சென்றது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு நல்ல கதையை எப்படி வேண்டாம் என்று சொன்னீர்கள் என்று எனக்கு கெட்ட பெயர் வந்துவிட்டது.
‘களவாணி’ படத்தின் கதையோடு சற்குணம் என்னிடம் வந்தார். சாந்தனு ஹீரோவாக நடிக்கவேண்டும் என்று சொன்னவர் ஒரு வாரத்தில் காணாமல் போனார். பின்னர் வேறொரு புது நடிகர் நடிக்கிறார் என்பதாக அறிவிப்பு வந்தது. இதுவும் அவருடைய துரதிர்ஷ்டம் என்று தான் சொல்லவேண்டும். சஅவரிடம் நான் அடிக்கடி நடிகர் விக்ரமை உதாரணம் காட்டுவதுண்டு. விக்ரம் படாத கஷ்டமில்லை. சரியான நேரம் வரும்போது எல்லாம் சரியாக நடக்கும்.
» ‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா’ வசனம் உருவானது எப்படி? - கே.பாக்யராஜ் பகிர்வு
» சும்மா உட்கார்ந்திருந்தால் மாயாஜாலம் நிகழ்ந்து விடாது - ஏ.ஆர்.ரஹ்மான்
இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.