'முன்னாபாய் 3'ஆம் பாகம் வருமா: அர்ஷத் வார்ஸி பதில்

By செய்திப்பிரிவு

'முன்னாபாய்' திரைப்படத்தின் மூன்றாம் பாகம் எடுப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என நடிகர் அர்ஷத் வார்ஸி கூறியுள்ளார்.

2003ஆம் ஆண்டு சஞ்ஜய் தத், க்ரேஸி சிங், அர்ஷத் வார்ஸி நடிப்பில் வெளியான திரைப்படம் 'முன்னாபாய் எம்பிபிஎஸ்'. '3 இடியட்ஸ்', 'பிகே', 'சஞ்ஜு' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் முதல் திரைப்படம் இது. இந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற இந்தப் படம் 'வசூல் ராஜா', 'சங்கர் தாதா' என்ற பெயர்களில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அதிலும் வெற்றி பெற்றன.'

2006ஆம் ஆண்டு 'லகே ரஹோ முன்னாபாய்' என்கிற பெயரில் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி கண்டது. மூன்றாவது பாகம் எடுக்கப்படுமா என்று பல வருடங்களாக ரசிகர்களிடையே கேள்வியெழுந்து வருகிறது. எடுக்கப்படும் என்றும் இயக்குநர் ஹிரானி சில பேட்டிகளில் சொல்லியிருந்தார்.

ஆனால் படத்தில் சர்க்யூட் என்கிற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த அர்ஷத் வார்ஸி மூன்றாம் பாகம் வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

"3-ஆம் பாகம் எடுக்கப்படவில்லை. நீங்கள் அனைவரும் விது வினோத் சோப்ரா மற்றும் ராஜ்குமார் ஹிரானியின் வீட்டுக்குச் சென்று அவர்களை மிரட்டி, சீக்கிரமாக எடுக்கச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டால் எனக்குத் தெரியவில்லை. அப்படி எடுத்தாலும் அது நன்றாக இருக்காது. பல வருடங்கள் கடந்து விட்டன. ஹிரானியும் மற்ற படங்களில் பிஸியாக இருக்கிறார். எனவே படம் எடுக்கப்படாது என்றே நினைக்கிறேன். எங்களுக்கு வருத்தம் தான்" என்று ஒரு பேட்டியில் அர்ஷத் வார்ஸி கூறியுள்ளார்.

அடுத்ததாக அனுஷ்கா நடிப்பில் வெளியான 'பாகமதி' படத்தின் இந்தி ரீமேக்கில் அர்ஷத் வார்ஸி வில்லனாக நடிக்கிறார். இந்தப் படம் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE