நடிகை வரலட்சுமி சரத்குமாரின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுத் தற்போது மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.
புதன்கிழமை அன்று நடிகை வரலட்சுமி சரத்குமாரின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. தற்போது இந்தக் கணக்கு மீட்கப்பட்டாலும் பழைய பதிவுகள் அனைத்தும் காணாமல் போயிருக்கிறது. கணக்கு மீட்கப்பட்ட பின் ஒரே ஒரு புகைப்படப் பதிவை மட்டுமே வரலட்சுமி பகிர்ந்துள்ளார். அதில் சரி பார்க்கப்பட்ட பயனர் ஒருவர் அனுப்பிய லின்க்கை தான் நம்பி க்ளிக் செய்ததாகவும், அதனால் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதோடு, எதிர்பார்ப்பு, உண்மை என்று ஒப்பிட்டு தான் ஒப்பனையுடன் இருக்கும் புகைப்படத்தையும், ஒப்பனை இல்லாமல் வீட்டில் சகஜமாக இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
"பார்க்கும் எல்லாவற்றையும் நம்பிவிடாதீர்கள்.
நம்மை ஒரு விஷயம் சற்று சிறப்பாக உணரச் செய்கிறது என்கிற காரணத்தால் அதை நாம் எப்படிக் கண்மூடித்தனமாக நம்புகிறோம் என்பதை நான் தற்போது உணர்ந்திருக்கிறேன். நேற்றிரவு, சரிபார்க்கப்பட்ட ஒரு பயனரிடமிருந்து வந்த லின்க்கை நான் க்ளிக் செய்ததால் எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டது. நல்லவேளையாக எனது கணக்கு எனக்குத் திரும்பக் கிடைத்துள்ளது. எனது பதிவுகளை மீட்க இன்னும் முயன்று வருகின்றனர்.
இதன் மூலம் நான் உணர்ந்த விஷயம் என்னவென்றால், சமூக வலைதளங்களில் நாம் ஆராதிக்கும் பிரபலங்களை நாம் பார்த்து, அவர்களைப் போல இருக்க முயற்சிக்கிறோம். இதை நாம் அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களிடமிருந்து ஊக்கம் பெறுங்கள். அவர்களைப் போல ஆக வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதை விட சிறப்பாக ஆக முடியும். உங்களை நீங்கள் நம்பினால் போதும்.
சமூக வலைதளத்தில் ஒரு விஷயம் பார்க்கக் கச்சிதமாக இருக்கிறது என்பதே அதன் உண்மையான நிலை கிடையாது. மகிழ்ச்சியாக இருங்கள், வாழ்க்கையை வாழுங்கள், சமூக வலைதளங்களில் சந்தோஷமாக நேரம் செலவிடுங்கள். ஆனால் அது உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு விடாதீர்கள். நீங்கள் யார் என்பதை அது தீர்மானிக்கக் கூடாது.
எனவே, இதோ என் புதிய தொடக்கம். என்னை அதிகமாக நான் நேசிக்கவும், நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை விரும்பி ஏற்றுக்கொள்வதற்குமான தொடக்கம். ஏனென்றால் நீங்கள் அனைவருமே எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே அற்புதமானவர்கள்" என்று வரலட்சுமி பகிர்ந்துள்ளார்.