தனுஷ் படம் குறித்த வதந்திக்கு ஜி.வி.பிரகாஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'அந்தரங்கி ரே'. தற்போது இதன் படப்பிடிப்பு நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுமையாக முடிவு பெறவுள்ளன.
'அந்தரங்கி ரே' படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தனுஷ் - கார்த்திக் நரேன் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
கரோனா ஊரடங்கு சமயத்திலேயே ஜி.வி.பிரகாஷ், இப்படத்துக்காக 3 பாடல்களை முடித்துவிட்டார். இந்நிலையில், தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துவிட்டார்கள் எனச் செய்திகள் வெளியாகின. இது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"#D43 படத்துக்கான மூன்று பாடல்கள் முடிந்துவிட்டன. நான்காவது பாடலின் ஒலிப்பதிவைத் தொடங்குகிறோம். பாடல்கள் அற்புதமாக வந்திருப்பதை நினைத்து உற்சாகத்தில் இருக்கிறோம். அட்டகாசமான ஆல்பத்துக்குத் தயாராக இருங்கள்".
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.