பிரபாஸ் - கே.ஜி.எஃப் இயக்குநர் இணையும் சலார்

By செய்திப்பிரிவு

'கே.ஜி.எஃப்' இயக்குநர் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படத்துக்கு 'சலார்' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1'. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்திருந்த இப்படத்தின் 2-ம் பாகமான 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' தயாரிப்பில் உள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தங்களுடைய அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பு இன்று (டிசம்பர் 2) வெளியாகும் எனத் தெரிவித்தது. அதன்படி, 'கே.ஜி.எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீலின் அடுத்த படத்தையும் ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதில் பிரபாஸ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'சலார்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியத் திரையுலகில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம்.

இதுவரை இந்தியத் திரையுலகில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் அனைத்து மொழிகளிலும் 3 படங்கள் தயாரித்து வெளியிட்டதில்லை. 'கே.ஜி.எஃப் சேப்டர் 1', 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் - பிரபாஸ் படத்தையும் அனைத்து மொழிகளிலும் வெளியிடவுள்ளது ஹொம்பாளே பிலிம்ஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE