மீண்டும் டீகே இயக்கத்தில் காஜல் அகர்வால்

By செய்திப்பிரிவு

மீண்டும் டீகே இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். இது ஒரு பேய்/ திகில் படமாக உருவாகிறது.

'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் டீகே. இதில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள 'காட்டேரி' திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

தற்போது மீண்டும் ஒரு பேய்ப் படத்தை டீகே இயக்குகிறார். இதில் நான்கு நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் காஜல் அகர்வால். இதற்கான ஒரு ஃபோட்டோஷூட்டும், மாதிரி படப்பிடிப்பும் சமீபத்தில் சென்னையில் நடந்ததாகவும் இதில் கணவருடன் சென்னை வந்த காஜல் அகர்வால் பங்கேற்றதாகவும் தெரிகிறது.

இயக்குநர் டீகே, காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் கவுதமுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புதிய படம், திகிலூட்டும் பேய், பயமுறுத்தும் பேய், நகைச்சுவை செய்யும் பேய் என பலவிதமான பேய்கள் இடம் பெறுமாறு ஒரு வித்தியாசமான கதை என்று கூறப்படுகிறது. இதற்கு முன் கவலை வேண்டாம் திரைப்படத்தில் டீகே இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், ஏற்கனவே கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2', துல்கர் சல்மானுடன் 'ஹே சினாமிகா', 'குயின்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக 'ஆச்சார்யா' திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் ஓடிடி தளத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திகில் தொடரிலும் காஜல் அகர்வால் களமிறங்குகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE