த்ரிவிக்ரம், சுகுமார், ராஜமௌலி: மகேஷ்பாபுவின் அடுத்தடுத்த திட்டம்

By செய்திப்பிரிவு

நடிகர் மகேஷ் பாபு தனது அடுத்தடுத்த படங்களை முன்னணி இயக்குநர்களுடன் திட்டமிட்டுள்ளார்.

அடுத்ததாக 'சர்காரு வாரி பாட்டா' திரைப்படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பில் விரைவில் மகேஷ் பாபு கலந்துகொள்ளவிருக்கிறார். 'கீத கோவிந்தம்' திரைப்படத்தின் இயக்குநர் பரசுராம் இந்தப் படத்தை இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடிக்கிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாசுடன் ஒரு திரைப்படத்தை மகேஷ்பாபு திட்டமிட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம், "'கலேஜா' திரைப்படத்தின் 10வது ஆண்டு, ஒரு நடிகனாக என்னை நானே புதுப்பித்துக்கொண்டேன். என்றும் விசேஷமான படமாக இருக்கும். அனைத்துக்கும் காரணமான என் நல்ல நண்பர், திறமைசாலி த்ரிவிக்ரமுக்கு நன்றி. எங்கள் அடுத்த திரைப்படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். விரைவில் நடக்கும்" என்று இது குறித்து மகேஷ் பாபு சூசகமாக ட்வீட் செய்திருந்தார்.

இதன் பிறகு சுகுமார் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். சில வாரங்களுக்கு முன் சுகுமார் மகேஷ் பாபுவை சந்தித்து கதை சொன்னதாகவும், அவருக்குக் கதை பிடித்து ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. 'ரங்கஸ்தலம்' வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா இருவரையும் வைத்து 'புஷ்பா' என்கிற படத்தை சுகுமார் தற்போது இயக்கி வருகிறார்.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்திலும் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE