தியோல் குடும்பத்தின் ’அப்னே 2’: அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியீடு

தர்மேந்திரா, சன்னி தியோல் பாபி தியோல், கரன் தியோல் என அனைவரும் சேர்ந்து நடிக்கும் 'அப்னே 2' திரைப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா, அவரது மகன்கள் சன்னி மற்றும் பாபி டியோல் ஆகியோர் சேர்ந்து நடித்த 'அப்னே' என்கிற திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. கேத்ரீனா கைஃப், ஷில்பா ஷெட்டி ஆகியோரும் இதில் நடித்திருந்தனர்.

தர்மேந்திரா தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து 'யம்லா பக்லா தீவானா: ஃபிர் சே' என்கிற படத்தில் 2018ஆம் ஆண்டு நடித்திருந்தார். கடந்த வருடம் சன்னி தியோல், தனது மகன் கரன் தியோலை 'பல் பல் தில் கே பாஸ்' என்கிற படத்தில் அறிமுகம் செய்திருந்தார்.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இவர்கள் அனைவரும் சேர்ந்து நடிக்கும் 'அப்னே 2' படத்தை அறிவித்துள்ளனர். தனது தந்தை , சகோதரர் மற்றும் மகனுடன் சேர்ந்து நடிப்பது தனக்குக் கிடைத்த ஆசிர்வாதம் என்று சன்னி டியோல் கூறியுள்ளார்.

அனில் ஷர்மா இயக்கும் இந்தப் படத்தை தீபக் முகுத் தயாரிக்கிறார். 2021 மார்ச் மாதத்தில் படப்பிடிப்புத் தொடங்கும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE