உருவாகிறது 'மாயாண்டி குடும்பத்தார் 2'?

By செய்திப்பிரிவு

நந்தா பெரியசாமி இயக்கத்தில் 'மாயாண்டி குடும்பத்தார் 2' உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2009-ம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் 'மாயாண்டி குடும்பத்தார்'. பி மற்றும் சி சென்டர்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், ஜெகன், ஜி.எம்.குமார், தருண் கோபி, ரவி மரியா, நந்தா பெரியசாமி, மயில்சாமி, கனியா, ஹேமலதா, ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான படங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்ற படம் இது. அவர் மறைவதற்கு முன்பு 'மாயாண்டி குடும்பத்தார் 2' படமெடுக்கத் திட்டமிட்டு இருந்தார். ஆனால், அதற்குள் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். தற்போது 'மாயாண்டி குடும்பத்தார் 2' படம் உருவாவது உறுதியாகியுள்ளது.

முன்னணி நிறுவனம் ஒன்று நந்தா பெரியசாமி இயக்கத்தில் 'மாயாண்டி குடும்பத்தார் 2' படத்தை உருவாக்கவுள்ளது. இதில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கவுள்ளார். 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் நடித்த பலரும், 2-ம் பாகத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE