‘ஹீரோ- ஹீரோயின் ஃபார்முலா’ படங்களை தாண்டி வரவேண்டிய நேரமிது - நவாசுதீன் சித்திக்

பாலிவுட்டின் பிரபல நடிகராக இருப்பவர் நவாசுதீன் சித்திக். ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’, ‘ராமன் ராகவ் 2.0’, ‘ரயீஸ்’, ‘போட்டோகிராஃப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் நவாசுதீன் சித்திக் கூறியுள்ளதாவது:

ஊரடங்கின் போது நிறைய உலக சினிமாக்களை பார்க்க நேர்ந்தது. அப்போது ‘ஹீரோ- ஹீரோயின்’ ஃபார்முலா படங்களை தாண்டி யோசிக்க வேண்டிய நேரம் இது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். டிஜிட்டல் ஊடகம் நமக்கு ஒரு வரப்பிரசாதம். அது மிகவும் ஜனரஞ்சகமான ஒரு தளம். அதில் மக்கள் நல்ல படங்களை பார்க்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அது போன்ற படங்களை பார்ப்பதில் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் கூட உங்களால் வேறு சிலவற்றை தேர்வு செய்து பார்க்க முடியும்.

ஒரே மாதிரியான படங்களை தொடர்ந்த பார்த்த பிறகு நம் மூளை வளராமல் போய்விட்டதாக உணர்கிறேன். நாம் படிப்பினை பெற்றவர்களாக ஆவது மிகவும் முக்கியம். புதுமையான, ஆக்கப்பூர்வமான படங்களை பார்ப்பதன் மூலமே அது நிகழும் என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு நவாசுதீன் சித்திக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE