'சூர்யா 40' குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குநர் பாண்டிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா. இதில் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்புதான் முதலில் தொடங்கவுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரியிலிருந்து படப்பிடிப்புக்குச் செல்லப் படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
பாண்டிராஜ் படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார், நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் எனப் பல செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக நீண்ட நாட்களாக அமைதி காத்து வந்த இயக்குநர் பாண்டிராஜ், தற்போது தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அன்புள்ள நண்பர்களே, 'சூர்யா 40' குறித்த உங்கள் ஆர்வத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம். விரைவில் நடிகர்கள் குறித்த அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். சிறப்பான படத்தை உங்களுக்குத் தர நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்."
இவ்வாறு இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.