‘துர்காவதி’ படத்தின் தலைப்பு ‘துர்காமதி: தி மித்’ என்று மாற்றப்பட்டுள்ளது.
அக்ஷய் குமாரின் கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துர்காவதி’. நாயகியை மையமாகக் கொண்ட இப்படத்தில் பூமி பெட்னேகர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.அஷோக் இயக்கியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி அன்று ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது.
இந்நிலையில் நேற்று அக்ஷய் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் இப்படத்தின் தலைப்பு ‘துர்காமதி: தி மித்’ என்று மாற்றப்பட்டிருந்தது.
இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். ஏற்கெனவே வெளியான போஸ்டர்களில் ‘துர்காவதி’ என்று இருந்த தலைப்பு தற்போது ‘துர்காமதி’ என்று மாற்றப்பட்டது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், இந்தத் தலைப்பு மாற்றம் குறித்து படக்குழுவினர் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லக்ஷ்மி’ திரைப்படத்துக்கு முதலில் ‘லக்ஷ்மி பாம்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் தலைப்பு இந்துக் கடவுளான லட்சுமியை அவமதிப்பதுபோல இருப்பதாக சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சை உருவானது. பலரும் அக்ஷய் குமாரைக் கடுமையாகச் சாடி வந்தனர்.
இந்தச் சர்ச்சை எதிரொலியாகவே ‘துர்காவதி’ திரைப்படத்தின் தலைப்பும் மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.