மும்பை போலீஸார் தன் மீது பதிவு செய்த எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி மும்பை நீதிமன்றத்தில் நடிகை கங்கணா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் மும்பை போலீஸாரின் விசாரணை குறித்து நடிகை கங்கணா ரணாவத் குற்றம் சாட்டினார். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
இதனிடையே, மும்பையில் உள்ள அவரது பங்களாவில் அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் நடந்ததாகக் கூறி மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த பங்களாவின் ஒரு பகுதியை இடித்தனர். இது தொடர்பான வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்தச் சூழலில் மதரீதியான வெறுப்பைத் தூண்டுவதாக நடிகை கங்கணா, அவரது சகோதரி ரங்கோலி மீது மும்பை காவல்துறையில் கடந்த அக்டோபர் மாதம் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து கங்கணா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது மும்பை போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இதையடுத்தத் தன்னைச் சிறையிலடைக்க சிலர் முயல்வதாக கங்கணா தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் கங்கணாவும் அவரது சகோதரியும் தங்கள் மீது மும்பை போலீஸார் பதிவு செய்த எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு வரும் இன்று (24.11.20) நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் எம்.எஸ்.கார்த்திக் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.