அனைவருமே பாரம்பரிய காலத்துக்குத் திரும்பியுள்ளோம்: சிவகார்த்திகேயன்

கரோனா அச்சுறுத்தலால் அனைவருமே பாரம்பரிய காலத்துக்குத் திரும்பியுள்ளோம் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'டாக்டர்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் 'அயலான்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இரண்டு படங்களையுமே கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே படப்பிடிப்பில் கலந்துகொண்டது மற்றும் ஓடிடி வெளியீடு குறித்து சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:

"இந்தக் கரோனா காலத்தில் நாம் அனைவருமே பாரம்பரிய காலத்துக்கு வந்துவிட்டோம். யாரையாவது பார்த்தவுடன் கைகூப்பி வணக்கம் சொல்கிறோம். ஒழுங்காகக் கை கழுவிவிட்டுச் சாப்பிடுகிறோம்.

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வழக்கமான சூழலுக்குத் திரும்பும். தீபாவளிக்குப் படங்கள் வெளியானபோது முதல் 2 நாட்களுக்கு மக்கள் பலரும் திரையரங்குகளுக்கு வந்துள்ளனர். இன்னும் புதிய படங்கள் வெளியாகும்போது, மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சஜக நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம். திரையரங்கம் மட்டுமல்ல அனைத்து வியாபாரமுமே அப்படித்தான் இருக்கிறது என நினைக்கிறேன்.

முதலில் 'டாக்டர்' வெளியாகும். பின்பு 'அயலான்' வரும். படங்கள் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்வார்கள். சில படங்கள் திரையரங்குகளில் வெளியானால் சரியாக இருக்கும். சில படங்கள் ஓடிடியில் வெளியானால் சரியாக இருக்கும். இன்றைய காலத்தை மனதில் வைத்து வியாபாரம் பண்ணுவதுதான் தயாரிப்பாளர்களின் எண்ணவோட்டமாக இருக்கும். படங்கள் எதில் வெளியானாலும் பெருவாரியான மக்களைப் போய்ச் சேர வேண்டும். அதுதான் என்னைப் போன்ற நடிகர்களின் ஆசை. மக்களுக்கு ரொம்பப் பிடிக்கும் கதைகளில் நடிக்கும்போது, கண்டிப்பாகப் போய்ச் சேரும்.

'டாக்டர்' படத்தில் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் படமாக்கப்படவுள்ளது. முக்கியமான காட்சிகள் அனைத்துமே கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே படமாக்கிவிட்டோம். சின்ன சின்ன காட்சிகள் மட்டுமே பாக்கி இருந்தது. அதைத்தான் இப்போது படமாக்கினோம்".

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE