இந்தியாவில் டிச.4ஆம் தேதி வெளியாகிறது ‘டெனெட்’- டிம்பிள் கபாடியா அறிவிப்பு

கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ திரைப்படம் இந்தியாவில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி அன்று வெளியாகிறது.

கரோனா நெருக்கடியால் உலக அளவில் பொதுமக்கள் கூடும் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல இடங்கள் பல மாதங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் புதிதாக வெளியாகவிருந்த பல திரைப்படங்கள் வெளியாகாமல் முடங்கின. சில படங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. அவற்றில் கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ படமும் ஒன்று.

கரோனா தொற்று குறைந்துள்ள சில நாடுகளில் ‘டெனெட்’ படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. வெளியான அனைத்து நாடுகளிலும் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் இப்படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியத் திரையரங்குகளில் இப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்நிலையில் ‘டெனெட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளதாக அப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ள டிம்பிள் கபாடியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

'' ‘டெனெட்’ திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி அன்று வெளியாகும் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மிகப்பெரும் கவுரவம். பெரிய திரையில் மட்டும் காணத்தக்க ஆக்‌ஷன் காட்சிகளும், அதிரடித் திருப்பங்களும் இப்படத்தில் நிறைந்துள்ளன''.

இவ்வாறு டிம்பிள் கபாடியா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE