ரசிகர்களின் அன்புக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் -சஞ்சய் தத் நெகிழ்ச்சி

By ஐஏஎன்எஸ்

ரசிகர்களின் அன்புக்கு தான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வந்தன. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை என்றாலும் பாலிவுட் பத்திரிகையாளர் கோமல் நாட்டா இச்செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து, சஞ்சய் தத் வேகமாகக் குணம் பெற பிரார்த்தனை செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் மருத்துவச் சிகிச்சைக்காக தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்வதாக சில நாட்களுக்குப் பின் அறிவிக்கப்பட்டது.

பிறகு சஞ்சய் தத் மெலிந்து காணப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் பரவியது. இது அவரது ரசிகர்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின், 'கே.ஜி.எஃப் 2' படக் கதாபாத்திரத்துக்கான சிகை அலங்காரம் செய்ய நட்சத்திர சலூனுக்கு சஞ்சய் தத் சென்றார். இந்த வீடியோவை, சலூன் உரிமையாளர் ஆலிம் ஹகீம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பாக ‘டோர்பாஸ்’ என்ற படத்தில் சஞ்சய் தத் நடித்திருந்தார். ஆனால் ஊரடங்கால் அப்படத்தின் வெளியீடு ரத்தானது. தற்போது இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் டிசம்பர் மாதம் வெளியாக தயாராகியுள்ளது.

கிரிஷ் மாலிக் இயக்கியுள்ள ‘டோர்பாஸ்’ படத்தில் நர்கிஸ் ஃபக்ரி, ராகுல் தேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து சஞ்சய் தத் கூறியுள்ளதாவது:

கடந்த சில மாதங்களாக ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த சக்திவாய்ந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எல்லைகள் தாண்டிய அதிர்வலைகளை உண்டாக்கக் கூடிய இப்படம் உலகம் முழுவதுமுள்ள நல்ல பார்வையாளர்களை சென்றடையும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சஞ்சய் தத் கூறியுள்ளார்.

கடைசியாக சஞ்சய் தத் நடிப்பில் 'சடக் 2' திரைப்படம் ஓடிடியில் வெளியானது. 'கே.ஜி.எஃப் 2' படத்தில் ஆதிரா என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE