தமிழ் மைக் என்ற யூடியூப் சேனலுக்கு இயக்குநர் சமுத்திரக்கனி பேட்டியளித்துள்ளார். அதில் தான் திரையுலகில் நுழைந்ததை பற்றியும், தோல்விகளை கடந்து நடிகர் ஆனதைப் பற்றியும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலையும் போதும் ஸ்டூடியோக்களில் ஏறி இறங்கும்போது என் முன்னால் நன்றாக பேசிவிட்டு நான் வாசலை கடப்பதற்கு முன்பாகவே கேலி பேசியவர்கள் உண்டு. இவன் முகத்தை கண்ணாடியில் பார்த்ததே இல்லையா என்றெல்லாம் கூட கிண்டல் செய்தனர். அவற்றை என்னை நான் வளர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே பார்த்தேன்.
சில காட்சிகளை நானே எழுதுவேன். அவற்றை நானே ஸ்டூடியோக்களின் சென்று நடித்தும் காட்டுவேன். இப்படியே போய்க் கொண்டிருந்தபோது, நம்மை இவ்வளவு கேவலப்படுத்துகிறார்களே, நடிக்கும் ஆசையை தள்ளி வைத்துவிட்டு நாம் ஏன் உதவி இயக்குநாக முயற்சி செய்யக் கூடாது என்று தோன்றியது. அப்படி முயற்சி செய்து தான் சுந்தர் கே,விஜயனிடம் சேர்ந்தேன். அதன்பிறகு கே.பாலசந்தரிடம் பணியாற்றினேன்.
நாம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த உலகில் யாரோ ஒருவர் நம்மை கவனித்துக் கொண்டிருப்பார்கள். ‘நெறஞ்ச மனசு’ படம் இயக்கி முடித்தேன். படம் தோல்வி என்று சொன்னார்கள். அப்போது என் மகன் ஆறு மாத கைக் குழந்தை. மனைவியிடம் சொல்லிவிட்டு தேனி புறப்பட்டுச் சென்றேன். அங்கே ‘பருத்தி வீரன்’ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. நேராக அமீர் அண்ணனின் அறைக்கு சென்று பையை வைத்து விட்டு படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விட்டேன். இரண்டு நாட்கள் கழித்து அமீர் அண்ணன் என்னிடம் ‘இரண்டு படங்கள் நடித்து விட்டு இங்கே வந்து வேலை செய்து கொண்டிருக்கிறீர்களே?’ என்று கேட்டார். நான் எடுத்த படம் தோல்வியடைந்து விட்டது, எனவே முதலில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினக்கிறேன் என்று அவரிடம் கூறினேன்.
160 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பிறகு திரும்பவும் சீரியலுக்கு சென்றேன். செல்வி, அரசி, தங்கவேட்டை நிகழ்ச்சி உள்ளிட்ட 3000 எபிசோட்களை இயக்கினேன். அப்போது சசிகுமார் வந்து நடிக்க கூப்பிட்டார். வாழ்வா சாவா என்ற நிலை ஏற்பட்டது. நான் இயக்கிக் கொண்டிருந்த மூன்று மெகா சீரியல்களை மூன்று இணை இயக்குநர்களிடம் ஒப்படைத்து விட்டு நடிக்கச் சென்றேன். என் மனைவியிடம் இதை சொன்னபோது தயங்கினார். நான் எதைத் தேடி இங்கே வந்தேனோ அது என்னைத் தேடி வந்திருக்கிறது என்று அவரிடம் கூறினேன். அப்படித்தான் சுப்ரமணியபுரம் வாய்ப்பு கிடைத்தது.
நான் வேலை செய்யும் இடத்தில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். முகமூடியை எடுத்து மாட்டிக் கொண்டால் காணாமல் போய்விடுவோம். உண்மைத்தன்மையுடன் இருந்தால் நம்மை தேடி அனைத்தும் வரும். இப்போது வரை எனக்கு அது தான் நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு சமுத்திரக்கனி கூறியுள்ளார்.