பஞ்சாபின் அடையாளம் என்ற பெருமை பெற்றுள்ள நடிகர் சோனு சூட், தனது பெற்றோர் இல்லாததை நினைத்து இப்போதுதான் அதிகமாக வருத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.
வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார்.
சமீபத்தில் சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவரே அமைத்துக் கொடுத்தார்.
சோனு சூட்டின் நல உதவிகளை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர் சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து அவருக்குக் கூடுதல் கவுரவத்தை அளித்துள்ளது.
இது குறித்துப் பேசியிருக்கும் சோனு சூட், "எப்போதையும் விட இப்போதுதான் எனது பெற்றோர் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். அவர்களைப் பெருமைப்படுத்துவேன் என்று எப்போதும் அவர்களிடம் கூறுவேன். எங்களது சொந்த ஊரான மோகா முழுக்க எனது பெயரை அறியச் செய்வேன் என்றும் அவர்களிடம் உறுதியளித்திருந்தேன்.
இது எல்லாமே எனது பெற்றோரின் ஆசிர்வாதங்கள் தான். என்னை பஞ்சாபின் அடையாளமாக நியமித்துள்ளனர். மேலே இருந்து என் பெற்றோர் என்னைப் பார்த்து புன்னகைப்பதை நான் உணர்கிறேன். இது மிகப்பெரிய பொறுப்பு. இதை சுமக்கும் திறன் எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன். என்னுள் அசாத்தியமான துணிச்சலையும், வலிமையையும் நான் உணர்கிறேன். அது எங்கிருந்து வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை.
ஒரு பக்கம் சிலர் என்னை விமர்சிக்கின்றனர். ஆனால் எனது நேர்மையான நோக்கமும், மக்களின் அன்பு மற்றும் நம்பிக்கையும் தான் என்னை இயக்குகிறது. அவர்களது நம்பிக்கையை சந்தேகப்படும் எந்த ஒரு நபராலும் போக்கிவிட முடியாது" என்று கூறியுள்ளார்.