சல்மான்கான் மற்றும் குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று இல்லை: பரிசோதனையில் தகவல்

By பிடிஐ

சல்மான்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான்கானின் ஓட்டுநருக்கும், இரண்டு ஊழியர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சல்மான்கானும் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

தொற்று உறுதியான மூன்று பேரும் மும்பையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் கூறப்படுகிறது.

இந்நிலையில் சல்மான்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் சல்மான் தரப்பிலிருந்து வரவில்லை.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். கரோனா அச்சத்தால் அந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ரத்தாகலாம் என்று கூறப்பட்டது. தற்போது பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதால் நாளை வழக்கம்போல பிக் பாஸ் படப்பிடிப்பில் சல்மான்கான் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

பிரபுதேவா இயக்கத்தில் 'ராதே' என்கிற திரைப்படத்தில் சல்மான்கான் நடித்துள்ளார். வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் இந்தத் திரைப்படம் கரோனா நெருக்கடியால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திஷா பதானி இதில் நாயகியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஓடிடியில் வெளியாகலாம் என்று பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE