'அரண்மனை 3' இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

சுந்தர்.சி இயக்கி வரும் 'அரண்மனை 3' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.

'ஆக்‌ஷன்' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் 'அரண்மனை 3' படத்துக்கான பணிகளைத் தொடங்கினார் சுந்தர்.சி. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு குஜராத் ராஜ்கோட்டில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் தொடங்கியது. ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.

கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கியுள்ளது படக்குழு.

இதற்காக அரண்மனை போன்ற அரங்கை சுமார் 2 கோடி ரூபாயில் உருவாக்கி அதில் படமாக்கியுள்ளனர். இந்த சண்டைக்காட்சியை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்துள்ளார். அதனை முடித்துவிட்டு, தற்போது பொள்ளாச்சியில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு.

இதில் 'அரண்மனை 3' படத்தின் ஒட்டுமொத்தப் படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். அங்கு முக்கியமான காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. டிசம்பர் 1-ம் தேதியுடன் படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது.

'அரண்மனை 3' படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஆர்யா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE