‘மே டே’ படத்தின் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் 

அஜய் தேவ்கன் - அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் ‘மே டே’ படத்தின் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜய் தேவ்கன் - அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் படம் ‘மே டே’. இப்படத்தை அஜய் தேவ்கனே தயாரித்து இயக்கவும் உள்ளார்.

‘மே டே’ மிகவும் பரபரப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும், இதில் அஜய் தேவ்கன் பைலட்டாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அமிதாப் கதாபாத்திரம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறுகையில், ''கடந்த காலங்களில் அஜய் தேவ்கனுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இப்படத்தில் அவருடன் சக பைலட்டாக நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் அவர் என் சக நடிகர் மட்டுமல்ல, என் இயக்குநரும் அவர்தான்.

எல்லா நடிகர்களையும் போலவே எனக்கும் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடிப்பது ஒரு கனவாக இருந்து வந்தது. இப்படத்தின் மூலம் அந்தக் கனவு நனவாகியுள்ளது'' என்று தெரிவித்தார்.

தற்போது ‘பூஜ்’ என்ற திரைப்படத்தில் அஜய் தேவ்கன் நடித்து வருவதால், அப்படத்தின் பணிகள் நிறைவு பெற்றதும், ‘மே டே’ படப்பிடிப்புப் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இப்படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் திரையரங்கில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE