வி.பி.எஃப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. இதனால், புதிய படங்கள் வெளியீட்டில் நீடித்த சிக்கல் தீர்ந்தது.
திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், வி.பி.எஃப் கட்டணப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் புதிய படங்கள் வெளியாகாமல் இருந்தன. ஆனால், திடீரென்று நவம்பர் மாதம் மட்டும் வி.பி.எஃப் கட்டணம் தேவையில்லை என்று க்யூப் நிறுவனம் அறிவித்ததால் படங்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே, இன்று (நவம்பர் 18) தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், க்யூப் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா இன்று விடுத்துள்ள அறிக்கை:
» குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய பிரசன்னா
» டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ்த் திரைப்படமானது ‘மூக்குத்தி அம்மன்’
"கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், க்யூப் நிறுவனம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே வி.பி.எஃப் கட்டணம் குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அந்தப் பேச்சுவார்த்தை இன்று இனிதே முடிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், க்யூப் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, க்யூப் நிறுவனம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் கட்டணத்தில் கணிசமான சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 31/3/2021 ஆம் தேதிக்குள், இந்த வி.பி.எஃப் பற்றிய ஒரு நிரந்தரத் தீர்வை மூன்று சாரரும் இணைந்து செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்பட துறை இந்தக் கரோனா கால பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும், புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், மூன்று சாரரும் இந்த சுமுகமான முடிவுக்கு வந்துள்ளனர்.
31/3/2021 ஆம் தேதிக்குள், மூன்று சாரரும் இணைந்து வி.பி.எஃப் கட்டணம் பற்றிய ஒரு நிரந்தரத் தீர்வை எடுக்க உறுதி கொண்டுள்ளார்கள். அதன் மூலம், இந்தப் பிரச்சினை மீண்டும் தொடரக் கூடாது என்பதே அனைவரின் நோக்கம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், 31/3/2021 வரை தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில் எந்தச் சிக்கலும் இல்லை. அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும், நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும். அதன் மூலம், பார்வையாளர்களுக்குப் புதிய படங்களைத் திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். தமிழ்த் திரைப்படத்துறை அதன் மூலம் மொத்தமாக மீண்டு வர முடியும் என்று நாங்கள் மூன்று சாரரும் நம்புகிறோம்.
தமிழ் சினிமா மீண்டு வர எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட துறை சார்பிலும் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்".
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.