புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு ரஜினி, சிம்பு நிதியுதவி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசியின் உடல்நிலையை அறிந்து, ரஜினி, சிம்பு ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் தவசி. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து வந்தார்.

தற்போது ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தவசி. சில மாதங்களுக்கு முன்பு அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதுவும் உணவுக் குழாயில் புற்றுநோய் பாதிப்பு இருந்ததால், அவரது உடலை உருக்கியது. இதனால் ஆளே அடையாளம் தெரியாதது போல் அவர் மாறினார்.

மேலும், சிகிச்சைக்குப் பணமின்றி அவதிப்பட்டார். இது தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் என சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகின. இதை அறிந்த பல்வேறு முன்னணி நடிகர்களும் தவசிக்குப் பண உதவி அளித்து வருகிறார்கள்.

விஜய் சேதுபதி 1 லட்ச ரூபாயும், சமுத்திரக்கனி 50 ஆயிரம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 25 ஆயிரம் ரூபாயும், சூரி 20 ஆயிரம் ரூபாயும், செளந்தர்ராஜா 10 ஆயிரம் ரூபாயும் வழங்கியுள்ளனர். மேலும், மருத்துவமனையில் தவசியுடன் இருப்பவர்களுக்கு மூன்று வேளையும் மதுரையில் உள்ள சூரியின் உணவகத்திலிருந்து உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தவசியின் உடல்நிலை குறித்துக் கேள்விப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்துள்ளார் ரஜினி. மேலும், பண உதவியும் செய்துள்ளார். எவ்வளவு உதவி செய்தார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. நடிகர் சிம்பு 1 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

தவசியின் உடன் நடித்த நடிகர்கள் பலரும் அவருடைய வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE