கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகளை படப்பூஜையுடன் தொடங்கியுள்ளது படக்குழு.
'இரும்புத்திரை', 'ஹீரோ' ஆகிய படங்களுக்குப் பிறகு கார்த்தி நடிக்கவுள்ள படத்துக்கான கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் மித்ரன். இதன் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.
தற்போது தீபாவளியை முன்னிட்டு, படத்துக்கு பூஜை போட்டு பாடல் பதிவுடன் முதற்கட்டப் பணிகளைத் துவங்கியுள்ளது படக்குழு. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு கார்த்தியுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிந்தவுடன் துவங்கவுள்ளார்கள்.
பி.எஸ்.மித்ரனின் முந்தைய படங்களில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், எடிட்டிங் ரூபன் ஆகியோர் இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இதுவரை 2 பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டார்.
கமர்ஷியல் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.