சோனு சூட் எழுதியுள்ள புத்தகம்: ‘நான் தேவதூதன் அல்ல’

By ஐஏஎன்எஸ்

நடிகர் சோனு சூட் எழுதி வரும் புத்தகத்துக்கு ‘நான் தேவதூதன் அல்ல’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.

வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார்.

சமீபத்தில் சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவரே அமைத்துக் கொடுத்தார்.

சோனு சூட்டின் நல உதவிகளைப் பாராட்டி சக நட்சத்திரங்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்த அனுபவங்களைப் புத்தகமாக எழுதி வருவதாக சோனு சூட் அறிவித்திருந்தார். தற்போது அந்தப் புத்தகத்துக்கு ‘நான் தேவதூதன் அல்ல’ (ஐ அம் நோ மெஸையா) என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சோனு சூட் கூறியுள்ளதாவது:

''மக்கள் மிகவும் அன்புடனும் பாசத்துடனும் என்னை ஒரு தேவதூதன் என்று அழைக்கின்றனர். ஆனால், நிச்சயமாக நான் தேவதூதன் அல்ல என்று நம்புகிறேன். என் மனம் சொல்வதை நான் செய்கிறேன். மனிதர்களாக ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வது நமது கடமை''.

இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

இந்தப் புத்தகம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE