ஆனந்த ஷங்கர் படம்; 4 நாட்கள் படப்பிடிப்பில் விஷால் கலந்துகொள்ளாதது ஏன்?- வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஆனந்த் ஷங்கர் படத்துக்காக விஷாலின் உதவி மற்றும் மெனக்கெடலால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'சக்ரா' படத்தை முடித்துவிட்டு, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் முடித்துவிட்டுத் திரும்பியுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் ஆர்யா, மிருணாளினி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். தனுஷின் பழைய மேலாளரான வினோத் தயாரித்து வருகிறார்.

ஆனந்த் ஷங்கர் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, 4 நாட்கள் விஷால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் பரவியது. தயாரிப்பாளரின் வலியைத் தெரியாதவர் விஷால் என்றெல்லாம் பலரும் செய்திகளை வெளியிட்டு வந்தனர். ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்று இப்போது தெரியவந்துள்ளது.

பாலா இயக்கத்தில் உருவான 'அவன் இவன்' படத்தில் மாறுகண் வேடத்தில் நடித்திருந்தார் விஷால். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதே கண் வலி ஏற்பட்டதால் கடும் அவஸ்தைப்பட்டார் என்று படக்குழுவினர் பேட்டியளித்திருந்தனர். அந்தக் கண் வலி என்பது இப்போது வரைக்கும் அவருக்குக் குறையவில்லை. இதற்காக அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துத் திரும்பினார். ஆனால், தொடர்ச்சியாக விஷாலுக்குக் கண்ணில் வலி இருந்து வந்தது.

ஆனந்த் ஷங்கர் படப்பிடிப்பின்போதும், விஷாலுக்குக் கண்ணில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களுடன் ஆலோசித்து உடனடியாக அறையை விட்டு வெளியே வராமல் ஓய்வெடுத்துள்ளார். 4 நாட்களில் வலி குறைந்துவிடவே, படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 4 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு 10 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார் விஷால்.

மேலும், நவம்பர் 6-ம் தேதியுடன் முதற்கட்டப் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டு இருந்தது படக்குழு. ஆகையால், இரவு - பகலாக நடித்து நவம்பர் 5-ம் தேதியுடன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டார் விஷால். இதனால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விரைவில் விஷால் - ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE