'புஷ்பா' படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தலால் தொடங்கப்படாமல் இருந்த 'புஷ்பா' படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் ஒப்பந்தமானார். 'ரங்கஸ்தலம்' படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

முதற்கட்ட படப்பிடிப்புக்குப் பிறகு, கரோனா அச்சுறுத்தலால் 'புஷ்பா' படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் இன்று (நவம்பர் 10) முதல் 'புஷ்பா' படத்தின் படப்பிடிப்பு மாரேடுமில்லி காடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 30 நாட்களுக்கு மேல் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் 'புஷ்பா' தயாராகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவாளராகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE