க்யூப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு: புதிய படங்கள் வெளியாக வாய்ப்பு

By செய்திப்பிரிவு

க்யூப் நிறுவனத்தில் அறிவிப்பால், புதிய படங்கள் வெளியாக வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று (நவம்பர் 10) முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. 'தாராள பிரபு', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'ஓ மை கடவுளே', 'பிகில்' உள்ளிட்ட படங்கள் மீண்டும் திரையிடப்படுகின்றன. புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

வி.பி.எஃப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், புதிய படங்கள் எதுவும் வெளியாகாது என்று நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா அறிவித்தார். இதற்கு க்யூப் நிறுவனம், திரையரங்க உரிமையாளர் சங்கம் ஆகியவை கடும் அதிருப்தி தெரிவித்தன.

இந்நிலையில், நேற்றிரவு (நவம்பர் 10) க்யூப் நிறுவனத்துக்குப் போட்டி நிறுவனமான யூ.எஃப்.ஓ, நவம்பர் மாதம் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எஃப் கட்டணம் இலவசம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் க்யூப் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது.

நவம்பர் மாதம் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எஃப் கட்டணம் தேவையில்லை என்று இன்று (நவம்பர் 10) க்யூப் நிறுவனமும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், தமிழகத்தில் புதிய படங்கள் வெளியாக வாய்ப்பு இருக்கும் எனத் தெரிகிறது. சென்னையில், "தீபாவளி முதல் 'இரண்டாம் குத்து' " என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. வேறு எந்தவொரு படமும் போட்டியின்றி இந்தப் படம் வெளியாகும் என்றே கருதப்படுகிறது.

க்யூப் நிறுவனம் அறிவித்திருப்பதை முன்வைத்து, நவம்பர் மாதம் மட்டும் படங்களை வெளியிடுவோம் என்று விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE