ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் அமிதாப் - அஜய் தேவ்கன்

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப் பச்சன் - அஜய் தேவ்கன் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைகின்றனர்.

அஜய் தேவ்கன் - அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து ‘மேஜர் சாஹேப்’, ‘காக்கி’, ‘சத்யாகிரஹா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். இதில் ‘சத்யாகிரஹா’ திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் அமிதாப் பச்சன் - அஜய் தேவ்கன் இருவரும் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ‘மே டே’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘மே டே’ மிகவும் பரபரப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும், இதில் அஜய் தேவ்கன் பைலட்டாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அமிதாப் கதாபாத்திரம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் அஜய் தேவ்கனே இப்படத்தைத் தயாரித்து இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ‘பூஜ்’ என்ற திரைப்படத்தில் அஜய் தேவ்கன் நடித்து வருவதால், அப்படத்தின் பணிகள் நிறைவு பெற்றதும், ‘மே டே’ படப்பிடிப்புப் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இப்படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் திரையரங்கில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE