'ஈஸ்வரன்' படக்குழுவினருக்கு சிம்பு தீபாவளிப் பரிசு

'ஈஸ்வரன்' படத்தின் ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் தீபாவளிப் பரிசு வழங்கியுள்ளார் சிம்பு.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த 'ஈஸ்வரன்' படப்பிடிப்பு நவம்பர் 6-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தொடர்ச்சியாக 40 நாட்கள் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாலசரவணன் உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், இதில் பணியாற்றிய 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளிப் பரிசுகளை சிம்பு வழங்கியுள்ளார்.

மேலும், தன்னுடன் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கியுள்ளார். சிம்புவின் இந்தத் திடீர் பரிசால் படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் நன்றி தெரிவித்தார்கள்.

'ஈஸ்வரன்' முடிவடைந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 9-ம் தேதி முதல் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தில் சிம்பு நடிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE