கோவாவில் தடை செய்யப்பட்ட பகுதியில் ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்ததாக நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடிகரும் மாடலுமான மிலிந்த் சோமனின் நிர்வாணப் புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
நவம்பர் 4 அன்று, நடிகர் மிலிந்த் சோமன் தனது பிறந்த நாளை முன்னிட்டு கோவா கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவது போன்ற புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் புகைப்படத்தை எடுத்தது சோமனின் மனைவி அங்கிதா. இந்தப் புகைப்படத்துடன், "எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். 55 வயது. இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது இதுகுறித்து கோவா சுரக்ஷா மன்ச் என்கிற உள்ளூர் அரசியல் கட்சி வாஸ்கோ காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளது. மிலிந்த் சோமன் இந்தப் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். ஆபாசமான இந்தப் புகைப்படம் கோவாவின் கலாச்சாரத்தையும், பெயரையும் கெடுப்பதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பூனம் பாண்டேவின் கைதைத் தொடர்ந்தே இணையத்தில் சலசலப்பு எழுந்தது. மிலிந்த் சோமனின் நிர்வாணப் புகைப்படத்துக்கு அவரைக் கைது செய்யவில்லை, பூனம் பாண்டேவை மட்டும் ஏன் கைது செய்ய வேண்டும் என்று கேட்டு, இந்தப் பாகுபாடு ஏன் என்று விமர்சித்துப் பலரும் கருத்துப் பகிர்ந்திருந்தனர்.