'மாஸ்டர்' திரைப்படத்தின் டீஸர், ட்ரெய்லர் வெளியீட்டில் தாமதம் ஏன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் 'மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து 'மாஸ்டர்' பின்வாங்கியது.
தற்போது 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடலாம், அதற்குள் கரோனா அச்சுறுத்தல் எல்லாம் குறைந்து சகஜநிலை திரும்பும் எனப் படக்குழு காத்திருக்கிறது. இதனிடையே 'மாஸ்டர்' படம் கண்டிப்பாக ஓடிடியில் வெளியாகாது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது ஏன் என்பது குறித்து ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
" 'மாஸ்டர்' திரைப்படம் பற்றிய செய்திகளை நாங்கள் அவ்வப்போது கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். டீஸர், ட்ரெய்லர் என்பது ரசிகர்களின் கொண்டாட்டத்துக்காக. எப்படி அதைப் பார்க்காமல் காத்திருக்கும் ரசிகர்கள் வருத்தமாக இருக்கிறார்களோ, அதை உருவாக்கி வைத்துவிட்டு ரசிகர்களிடம் காட்ட முடியாமல் அதைவிட அதிக வருத்தத்தில் நாங்கள் இருக்கிறோம்.
ஆனால், படத்தை எப்போது வெளியிட முடியும் என்பது தெரியாத நிலையில் டீஸர், ட்ரெய்லர் வெளியிடுவதற்கான அர்த்தம் இல்லாமல் போய்விடும். அது எந்த விதத்திலும் படத்துக்கு உதவாது. இப்போது திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைத்திருக்கிறது.
எனவே, திரையரங்குகள் திறக்கப்பட்டு மக்கள் வர ஆரம்பித்தவுடன் கண்டிப்பாக 'மாஸ்டர்' பற்றிய செய்திகள் வரும். விஜய் ரசிகர்களுக்காக இதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்" என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.