பாலியல் வழக்கில் கைதான விஜய் ராஸுக்கு ஜாமீன்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் ராஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

‘மான்சூன் வெட்டிங்’, ‘ரன்’, ‘டெல்லி 6’ உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்தவர் விஜய் ராஸ். சமீபத்தில் ஆயுஷ்மான் குரானா - அமிதாப் கூட்டணியில் வெளியான ‘குலாபோ சிதாபோ’படத்தில் நடித்திருந்தார். தற்போது வித்யா பாலன் நடிப்பில் உருவாகி வரும் ‘ஷெர்னி’ என்ற படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

‘ஷெர்னி’ படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் படக்குழுவைச் சேர்ந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாக நேற்று முன்தினம் விஜய் ராஸ் கைது செய்யப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பாலிவுட்டின் பிரபலமான நடிகர் என்பதால் விஜய் ராஸ் குறித்த செய்தியைப் பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டன.

இந்நிலையில் நேற்று (03.11.2020) விஜய் ராஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கோண்டியா மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளரான அதுல் குல்கர்னி கூறுகையில், ''படப்பிடிப்புத் தளத்தில் இருந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரையடுத்து விஜய் ராஸை நாங்கள் கைது செய்தோம். தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது விசாரணை அதிகாரியின் முன்பு அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE