கங்கணா மீது அவதூறு வழக்குத் தொடர்ந்த ஜாவேத் அக்தர்

By செய்திப்பிரிவு

நடிகை கங்கணா மீது பிரபல கவிஞர் ஜாவேத் அக்தர் அந்தேரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணத்துக்குப் பிறகு பாலிவுட் பிரபலங்களையும், வாரிசு நடிகர்களையும் கடுமையாகச் சாடி வருகிறார் நடிகை கங்கணா. வாரிசு நடிகர்களும் அவர்களை ஆதரிப்பவர்களுமே சுஷாந்தின் மரணத்துக்குக் காரணம் என்று கூறிவந்தார். இது தொடர்பாகப் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் பேட்டி கொடுத்து வந்தார்.

இந்நிலையில் பிரபல கவிஞர் ஜாவேத் அக்தர், நடிகை கங்கணா மீது அந்தேரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஒரு தொலைகாட்சிப் பேட்டியின்போது கங்கணா ரணாவத் தன்னைப் பற்றித் தவறாகவும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாகவும் பேசியதாக ஜாவேத் அக்தர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்குத் தொடர்பாக எந்தத் தகவலையும் அவரது வழக்கறிஞரான நிரஞ்சன் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 3 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE