சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கத் தவித்தேன்: சூர்யா

By செய்திப்பிரிவு

சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிக்கத் தவித்ததாக சூர்யா தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தீபாவளி வெளியீடாக நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

'சூரரைப் போற்று' படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்களை ஜூம் செயலி வழியாகச் சந்தித்துப் பேசினார் சூர்யா.

'சூரரைப் போற்று' படத்தில் பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து சூர்யா கூறியதாவது:

"சில படப்பிடிப்புகளில்தான் ரொம்பப் பிடித்த விஷயத்தைச் செய்து கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். 'நந்தா', 'பிதாமகன்', 'மெளனம் பேசியதே', 'காக்க காக்க' உள்ளிட்ட சில படப்பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியது. மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள் போகிறோம், புதுசா ஒரு கற்றல் நடக்கிறது என்று சொல்வது மாதிரி இந்தப் படம்.

'சூரரைப் போற்று' படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள்தான் நடைபெற்றது. ஒவ்வொரு நாளுமே இதுவரை பண்ணாத விஷயத்தைச் செய்து கொண்டிருக்கிறேன் என நினைத்தேன். அது ரொம்பவே புதுமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. மறுபடியும் சினிமாவை ரொம்ப ரசித்து, சந்தோஷமாக நடித்தேன்.

'சேது' பார்த்தவுடன் பாலா சாருடன் ஒரு படம் பண்ண வேண்டும் எனத் தோன்றியது. அப்படி, 'இறுதிச்சுற்று' படம் பார்த்துவிட்டு, இவரோடு ஒரு படம் செய்துவிட வேண்டும் எனத் தோன்றியது. எனக்கு ராக்கி கட்டிவிடும் சகோதரி சுதா கொங்கரா. நண்பர்களுக்குள் வியாபாரம் என்று வரும்போது, கருத்து வேறுபாடு வந்துவிடுமோ என நினைத்து நட்பாகவே இருப்போமே என்று கூறித் தவிர்த்தது உண்டு.

அப்படித்தான் சுதா கொங்கராவிடம் நிறைய விஷயங்கள் பேசுவோம். ஆனால், படம் பண்ணுவோம் என்று சீரியஸாக உட்கார்ந்து பேசியது கிடையாது. 'இறுதிச்சுற்று' பார்த்துவிட்டு என் கரியர் முடிவதற்குள் இவரோடு ஒரு படம் செய்துவிட வேண்டும் எனத் தவித்தேன். அப்படிச் செய்த படம்தான் 'சூரரைப் போற்று'. என்னை வைத்து அவரால் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்க முடிந்தது. ரொம்ப அழகான ஒரு பயணமாக இருந்தது. அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்".

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE