முதலில் திரையரங்கம்; பின்பு டிவி: சன் பிக்சர்ஸின் பலே திட்டம்

By செய்திப்பிரிவு

'பேச்சி' படத்தை முதலில் திரையரங்கில் வெளியிட்டுவிட்டு, பின்பு சன் டிவியில் ஒளிபரப்ப சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

'தேவராட்டம்' படத்துக்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்து வருகிறார். மதுரையைச் சுற்றி இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு 'பேச்சி' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதன் நாயகியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார்.

குறைந்த பட்ஜெட்டில் படமாக்கப்பட்டு வரும் இந்தப் படத்தினை முதலில் பொங்கல் பண்டிகைக்கு சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பத் திட்டமிட்டனர். இதனை முன்வைத்தே பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், தற்போது நவம்பர் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான வரைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இதனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'பேச்சி' வெளியீட்டில் மாற்றம் செய்துள்ளது. என்னவென்றால், 'பேச்சி' படத்தை டிசம்பர் 25-ம் தேதி வெளியீடாக மாற்றி, பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட்டுவிட்டு, அடுத்த 20 நாளில் பொங்கல் பண்டிகைக்கு சன் டிவியில் ஒளிபரப்பலாம் என்று முடிவு செய்துள்ளது.

'பேச்சி' படத்தை முடித்துவிட்டு, 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் மீண்டும் கார்த்தியை முத்தையா இயக்குவார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE