அன்பை பரப்பாமல் என்னை போல லவ்வர்பாய் ஆக முடியாது - ரசிகர்களுக்கு ஷாரூக் கான் நன்றி

By ஐஏஎன்எஸ்

நடிகர் ஷாரூக் கான் நேற்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு ஷாரூக் கான் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஷாரூக் கான் கூறியுள்ளதாவது:

என்னுடைய பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. என் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதையும் தாண்டி சில ரசிகர்கள் இந்த தருணத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதை நான் அறிவேன். மருத்துவர்களுக்கான கவச ஆடைகள், ரத்த தான முகாம்கள், உள்ளிட்ட ஏராளமான உதவிகளை செய்து வருகிறீர்கள். இதுதான் நாம் செய்வதிலேயே சிறந்த செயலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அன்பை பரப்பாமல் என்னை போல லவ்வர்பாய் ஆக முடியாது. எனவே அன்பை பரப்பும் உங்கள் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐபிஎல் தொடரில் தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உற்சாகம் அளிக்க, குடும்பத்தினருடன் துபாய் சென்றுள்ளார் ஷாரூக்கான்.

சில நாட்களுக்கு முன், கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனது பிறந்த நாளன்று தன் ரசிகர்கள் யாரும் தனது வீட்டுக்கு முன்னால் கூட வேண்டாம் என ஷாரூக் அறிவுறுத்தியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE