2-3 நாயகர்களை ஒரே படத்தில் நடிக்க வைப்பது சவாலானது: பிஜோய் நம்பியார் 

2-3 நாயகர்களை வைத்து திரைப்படம் எடுப்பது இந்தியத் திரையுலகில் சவாலானது என இயக்குநர் பிஜோய் நம்பியார் கூறியுள்ளார்.

'ஷைத்தான்', 'டேவிட்', 'வாஸிர்', 'சோலோ' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் பிஜோய் நம்பியார். இந்தப் படங்கள் அனைத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் 'டாய்ஷ்' என்கிற திரைப்படத்தை இயக்கி ஸ்ட்ரீமிங் தளத்தில் நேரடியாக வெளியிட்டுள்ளார் நம்பியார். இதுவும் ஒரே ஒரு நாயகன் இருக்கும் திரைப்படமல்ல.

இதுகுறித்துப் பேசியிருக்கும் நம்பியார், " 'டாய்ஷ்' படத்தில் நடிகர் தேர்வுக்கு மிகவும் கஷ்டப்பட்டேன். பெரும்பாலான பாலிவுட் நடிகர்கள் 2-3 நாயகர்கள் இருக்கும் கதையில் நடிக்க விரும்பவில்லை. இந்தத் துறையில் ஒரு படத்தை ஆரம்பிக்க நீண்ட காலம் ஆகிறது. அதுவும் வழக்கமான பொழுதுபோக்குப் படமாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படமென்றால் இன்னும் கடினம். பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதிலும் பல முக்கிய நடிகர்கள் நடிப்பது என்றால் அது பெரிய காரியம்.

இரண்டு நாயகர்கள் மற்றும் பல நாயகர்கள் சேர்ந்து நடிக்கும் படங்களைக் கண்டால் நமது துறை அச்சப்படுகிறது. பெரிய இயக்குநார்களுக்கே அப்படி ஒரு படம் எடுப்பது சவாலாக இருக்கிறது. 'டாய்ஷ்' 3 நாயகர்கள் இருக்கும் படம். இதில் நடிக்க வந்தவர்களுக்கு என் நன்றி.

நம் துறையில் கலைஞர்கள் மீது நம்பிக்கை இல்லை. பல பிரபல நடிகர்கள் ஒரே படத்தில் நடிக்கும்படியான கதையைப் பலர் எழுதுவதில்லை. நகைச்சுவைப் படங்களில் மட்டுமே அப்படிப் பார்க்க முடிகிறது. மற்ற வகைகள் எழுதப்படுவதில்லை. அதனால்தான் நம்மால் பல விஷயங்களைச் சொல்ல முடிவதில்லை. ஹாலிவுட்டில் இருப்பதைப் போல பல நடிகர்கள் முன் வந்து இப்படியான சுவாரசியமான, பல பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்க வேண்டிய கதையில் பங்கெடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அடுத்ததாக மாதுரி தீக்‌ஷித்துக்கான ஒரு நிகழ்ச்சியில் 4 பகுதிகளை நம்பியார் இயக்குகிறார். இது தர்மா ப்ரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாக உருவாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE