14 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்: ஆமிர் கான் மகள் ஐரா கான் பதிவு

By ஐஏஎன்எஸ்

தனது 14 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகர் ஆமிர் கானின் மகள் ஐரா கூறியுள்ளார்.

நடிகர் ஆமிர் கானுக்கும், முதல் மனைவி ரீனாவுக்கும் பிறந்தவர் ஐரா கான். ஆமீர் விவாகரத்து செய்த பிறகு ஐரா கான், அவரது சகோதரர் ஜுனைத் என இருவரும் ரீனாவின் கவனிப்பில் வளர ஆரம்பித்தனர். கடந்த வருடம், 'யூரிபெடீஸ் மெடியா' என்கிற மேடை நாடகம் மூலம் ஐரா கான் இயக்குநராக அறிமுகமானார்.

சமீபத்தில் ஐரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் தனது பெற்றோரின் விவாகரத்து குறித்தும், தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் பேசியுள்ளார்.

"என் சிறு வயதில் என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். அதனால் நான் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை. ஏனென்றால் இணக்கமான முறையில் விவாகரத்து நடந்தது. அவர்கள் இன்னும் நண்பர்களே. ஒட்டுமொத்தக் குடும்பமும் அப்படித்தான். எங்கள் குடும்பம் உடைந்துவிடவில்லை.

எனக்கு 14 வயதாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அந்த நேரத்தில் சூழல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் அந்த நபர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்துதான் செய்கிறாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அது தினமும் நடக்கவில்லை. அதனால் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது.

எனது பெற்றோர் என்னை அந்தச் சூழலிலிருந்து மீட்டனர். அதிலிருந்து வெளியே வந்த பின் நான் மோசமாக உணரவில்லை. பயப்படவில்லை. எனக்கு அதன்பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை, முடிந்துவிட்டது என்று நான் கடந்து வந்துவிட்டேன். யாரிடமும் இதுகுறித்து நான் பேசவில்லை.

ஏனென்றால் நானே அதைக் கையாள வேண்டும் என்று நினைத்தேன். மேலும், எனது உணர்வுகளை வைத்து மற்றவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்தேன். எந்தப் பிரச்சினையுமே நீண்ட நாட்கள் நாம் சிந்திக்கும் அளவு பெரியதல்ல" என்று ஐரா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE