'விக்டிம்' என்ற பெயரில் உருவாகி வரும் ஆந்தாலஜியில், 4 இயக்குநர்கள் கூட்டணி அமைத்துள்ளனர்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே, ஆந்தாலஜி பாணியிலான படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. சின்ன குழு, ஒரே இடத்தில் படப்பிடிப்பு, குறைந்த நாட்களில் படப்பிடிப்பு நிறைவு என ஒவ்வொரு முன்னணி இயக்குநர்களுமே ஆந்தாலஜி கதையில் களமிறங்கியுள்ளனர்.
ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியான 'புத்தம் புதுக் காலை' ஆந்தாலஜிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக 2 ஆந்தாலஜிக்கள் தயாராகி வருகிறது. வேல்ஸ் நிறுவனம் 'குட்டி லவ் ஸ்டோரி' என்ற ஆந்தாலஜியை தயாரித்துள்ளது.
இந்நிலையில், வெங்கட்பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி புதிய ஆந்தாலஜி ஒன்றை தயாரித்துள்ளது. இதில் வெங்கட் பிரபு, பா.இரஞ்சித், ராஜேஷ் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் இயக்கியுள்ளனர். 4 கதைகளுமே ஒரே கருவைக் கொண்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
'விக்டிம்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி, எதில் வெளியாகவுள்ளது என்பது இன்னும் முடிவாகவில்லை. கடந்த சில நாட்களாக ட்விட்டர் பக்கத்தில் பலரும் #TheVictim என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்து வந்தார்கள். அது அனைத்துமே இந்த ஆந்தாலஜியை அறிமுகப்படுத்தவே. இறுதியாக இந்த ஆந்தாலஜியை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.