தலைவி அப்டேட்: பிரம்மாண்ட பேரணி காட்சிகளை கிராபிக்ஸில் படமாக்க படக்குழுவினர் திட்டம்

By செய்திப்பிரிவு

விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தலைவி'. இந்தப் படம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே பாக்கியிருப்பதாகத் தெரிகிறது.

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சில நாட்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் சில முக்கிய காட்சிகளை படமாக்கியது படக்குழு. இதனை கங்கணா ரணாவத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசும் சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குநர் விஜய்.

இந்நிலையில் ஜெயலலிதா பேரணி செல்வது போன்ற காட்சிகளை பிரம்மாண்டமான முறையில் சென்னையில் படமாக்க திட்டமிட்டிருந்தது படக்குழு. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைவான நபர்களே படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதால் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அந்த காட்சியை கிராபிக்ஸ் மூலம் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தை வைத்து படமாக்க இன்னும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டுமென்பதால் படக்குழுவினர் அந்த காட்சியை கிராபிக்ஸ் மூலம் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE