பெண்கள் வெளியே வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததால்தான் மீடூ இயக்கம் ஆரம்பித்தது என்று கருத்துக் கூறிய முகேஷ் கண்ணாவுக்கு எதிராக இணையத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2017-ம் ஆண்டு ஹாலிவுட்டில், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களைப் பெண் கலைஞர்கள் மீடூ என்கிற இயக்கத்தின் பெயரில் வெளியே சொல்ல ஆரம்பித்தனர். இந்த இயக்கம் மிகப் பெரியதாக வளர்ந்து பல நாடுகளில் பிரபலமானது. மீடூ இயக்கத்தை முன்வைத்து அந்தந்த நாடுகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியே வர ஆரம்பித்தன.
இந்தியாவிலும் 2018 ஆம் ஆண்டு நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் மீடூ இயக்கம் வளர ஆரம்பித்தது. இன்று வரை திரைத்துறையைச் சேர்ந்த பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியிலான கொடுமைகள் குறித்து மீடூ இயக்கத்தின் உதவியோடு பேசி வருகின்றனர்.
சக்திமான் தொடர் மூலம் பிரபலமடைந்த நடிகர் முகேஷ் கண்ணா இந்த இயக்கம் பற்றிப் பேசுகையில், "பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வது. வேலை செய்ய ஆரம்பித்தவுடன்தான் இந்த மீடு பிரச்சினை தொடங்கியது. ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்க வேண்டும் என்று இன்று பெண்கள் பேசி வருகின்றனர்" என்கிற ரீதியில் கருத்துக் கூறியிருந்தார்.
» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானரி காலமானார்
» நிறைவேறியது மாளவிகா மோகனனின் ஆசை: தனுஷுக்கு நாயகியாக ஒப்பந்தம்
இந்தக் கருத்துக்கு இணையத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. "இந்த முட்டாள் சக்திமான் சமூகத்துக்கு மதிப்புக் கூட்டினாரா? அவர் என்ன மாதிரியான குடும்பத்தில் வளர்ந்தார் என்று தெரியவில்லை. ஏன் 5-6 வயதுக் குழந்தைகள் எல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பதை அவரிடம் யாராவது கேளுங்கள். பெண்களைப் பார்த்துப் பயப்படும் இதுபோன்ற பலவீனமான மனிதர்களுக்கென ஏன் ஒரு தளத்தைக் கொடுக்கிறீர்கள்?" என்று ஒரு பயனர் பதிவிட்டிருந்தார்.
இன்னொருவர், "இதுபோன்று அருவருப்பாக, வெறுப்பைக் காட்டும் ஆணாதிக்கக் கருத்தை நான் கேட்டதேயில்லை. உங்கள் மீது வைத்திருந்த அத்தனை மரியாதையும் போய்விட்டது" என்று பகிர்ந்துள்ளார்.
உங்களைப் போன்றவர்கள் சமூகத்தில் இருப்பதால்தான் மீடூ இயக்கம் வளர்ந்தது. பிரச்சினை உங்கள் மனப்பாங்குதான். இது போன்ற மக்களின் மனநிலையை மாற்ற முடியாது. இதிகாச நாடகங்களில் நடித்தும் இவர் எதுவும் கற்கவில்லை. எந்தப் பெண் கடவுளையும் வழிபடும் உரிமை இவருக்குக் கிடையாது. இவர்களெல்லாம் பெண்களை அவமானப்படுத்திவிட்டு பெண் கடவுளை வழிபடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்கிற ரீதியில் பலர் முகேஷ் கண்ணாவைச் சாடிப் பதிவிட்டு வருகின்றனர்.