2017-ம் ஆண்டு டிசி காமிக்ஸின் 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படம் வெளியானது. ஏற்கெனவே டிசி சினிமா உலகில் 'மேன் ஆஃப் ஸ்டீல்', 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸேக் ஸ்னைடர், 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின்போது ஸ்னைடரின் மகள் தற்கொலை செய்து கொண்டதால் ஸ்னைடரால் படத்தின் வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடியாமல் போனது.
படத்தில் சில கூடுதல் காட்சிகளைச் சேர்க்க, 'அவெஞ்சர்ஸ்' முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஜாஸ் வீடன் உதவியை ஸ்னைடர் ஏற்கெனவே நாடியிருந்ததால், வீடனை வைத்துப் படத்தை முடிக்க வைத்தது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். தொடர்ந்து படத்தின் சில பகுதிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்யப்பட்டன. படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.
இந்நிலையில் 'ஜஸ்டிஸ் லீக்' படத்தை மீண்டும் ஷூட் செய்தபோது வெள்ளையர் அல்லாத நடிகரின் நிறத்தை ஜாஸ் வீடன் எடிட்டிங்கில் திருத்தம் செய்து மாற்றியமைத்ததாக அப்படத்தில் சைபார்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரே ஃபிஷர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஃபோர்ப்ஸ் இதழுக்கு ரே ஃபிஷர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
''என்னைக் கொதித்தெழ வைத்து, ஜாஸ் வீடனைப் பற்றிப் பேசத் தூண்டியது எதுவென்றால் இந்த ஆண்டு என் காதில் வந்து விழுந்த ஒரு தகவல்தான். ‘ஜஸ்டிஸ் லீக்’ போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின்போது வெள்ளையர் அல்லாத ஒரு நடிகரின் நிறத்தைத் தனக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் அதை எடிட் செய்து மாற்றியிருக்கிறார் ஜாஸ் வீடன். இந்த ஆண்டிலேயே இதுதான் என்னைக் கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்ற சம்பவம்''.
இவ்வாறு ரே ஃபிஷர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி படப்பிடிப்பின்போது இனவெறி மிக்க உரையாடல்கள் நடைபெற்றதாகவும், அதில் வார்னர்ஸ் ப்ரதர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இந்நாள் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றதாகவும் ரே ஃபிஷர் குற்றம் சாட்டியுள்ளார்.