ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் பாடல் பாடவிருக்கும் ஆலியா பட்

By செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஆலியா பட் கலந்து கொள்ளவிருக்கிறார். மேலும் அவர் தோன்றும் பாடலை அவரே பாடவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஆலியா பட் நடிக்கவிருக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாதில் தொடங்கவுள்ளது. இதில் ஒரு பிரம்மாண்டப் பாடலின் படப்பிடிப்பும் அடங்கும். இந்தப் பாடலை ஆலியா பட்டே பாடுவார் என்று தெரிகிறது. அவருக்குத் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் பரிச்சயம் இல்லை என்பதால் இந்தியில் மட்டும் பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் ஆலியா பட் கௌரவத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவே படக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 'கங்குபாய் கதியாவாதி' என்கிற திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து வருகிறார். மும்பையில் ஒரு காலத்தில் வாழ்ந்த கங்குபாய் என்கிற பாலியல் தொழிலாளியைப் பற்றிய உண்மைக் கதை இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE