சமூக வலைதளங்களில் குழந்தை சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தால் கூட எதிர்மறை கருத்துகள் வருகின்றன: மாதவன்

By ஐஏஎன்எஸ்

குழந்தை சிரிக்கும் புகைப்படத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் கூட அங்கும் சில எதிர்மறை கருத்துகள் வருகின்றன என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர் நடிகர் மாதவன். இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் இவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ள மாதவன் சமூக வலைதளங்களில் தன்னால் முடிந்த அளவு நேர்மறை விஷயங்களைப் பகிர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாதவன் கூறியுள்ளதாவது:

''நான் மிகவும் நன்றியோடு உணர்கிறேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனக்கு இப்போது 50 வயதாகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 51 வயதாகிவிடும். இப்போதும் மக்கள் என் மீது அன்பு செலுத்துகின்றனர். என்னுடைய சமூக வலைதளங்களின் மூலம் நேர்மறை விஷயங்களைப் பரப்பவே முயல்கிறேன்.

நாம் ஒரு குழந்தை சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தால் கூட அங்கும் சில எதிர்மறை கருத்துகள் வரத்தான் செய்கின்றன. எனவே என்னால் முடிந்தவரை சமூக வலைதளங்களில் நேர்மறை விஷயங்களைப் பகிர்கிறேன்''.

இவ்வாறு மாதவன் கூறியுள்ளார்.

துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘சார்லி’ படத்தின் ரீமேக்கான ‘மாறா’ படத்தில் மாதவன் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE