மூன்று பாகங்களாக உருவாகும் நாகின்: ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்

'நாகின்' திரைப்படம் மீண்டும் உருவாகிறது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தத் திரைப்படத்தில் ஷ்ரத்தா கபூர் நாகின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

1976 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'நாகின்'. மனித உருவமாக மாறும் சக்திகொண்ட இச்சாதாரி நாகம், தனது ஜோடியைக் கொன்ற 5 மனிதர்களைப் பழிவாங்கும் கதையே 'நாகின்'. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் 'நீயா' என்ற பெயரில் வெளியாகி இங்கும் வெற்றி பெற்றது.

தொடர்ந்து இச்சாதாரி நாகம் பழிவாங்கும் கதைகள் பல வடிவங்களில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. 1986 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் நாகினாக நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்தார். இதுவும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால் இதன் இரண்டாம் பாகம் தோல்வியடைந்தது.

மேலும் 2015 இல் ஆரம்பித்து 'நாகின்' என்கிற பெயரில் 5 வருடங்களாக இந்தியில் மெகா சீரியலும் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி தேசிய அளவில் மிகப் பிரபலமான கதாபாத்திரமாக மாறியுள்ள இந்தப் பழிவாங்கும் இச்சாதாரி நாகத்தை வைத்து 'நாகின்' திரைப்படத்தை நிகில் திவிவேதி தயாரிக்கிறார். விஷால் ஃபியூரியா இதை இயக்குகிறார்.

'சாஹோ', 'பாகி 3' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் ஷ்ரத்தா கபூர் 'நாகின்' திரைப்படத்தின் தலைமை கதாபாத்திரமான இச்சாதாரி நாகமாக நடிக்கிறார்.

இதுபற்றிப் பேசியுள்ள ஷ்ரத்தா, "திரையில் நாகினாக நடிப்பது எனக்கு மிகவும் அலாதியானது. ஸ்ரீதேவி நடித்த நாகின் திரைப்படங்களைப் பார்த்து, அவரை ஆராதித்துதான் வளர்ந்தேன். அதேபோல இந்தியப் பாரம்பரியத்தில் இருக்கும் நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படையில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எப்போதும் இருந்தது. ரசிகர்களை என்றும் அதிசயிக்க வைத்த ஒரு மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிப்பதுபோல இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE