கோவாவில் படப்பிடிப்பு நடத்தியதன் மூலம் ஒரு கிராமத்தையே குப்பையாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கரண் ஜோஹர், தீபிகா படுகோன் உள்ளிட்டோருக்கு நடிகை கங்கணா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தலைப்பிடப்படாத ஒரு படத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பால் கோவாவின் ஒரு கிராமம் முழுக்க குப்பைக் கூலமாகி விட்டதாக நேற்று இணையத்தில் புகைப்படங்களும், வீடியோக்களும் வலம் வந்தன. இதற்குப் பலரும் தீபிகா மற்றும் கரண் ஜோஹருக்கு எதிராகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர்களைத் தொடர்ந்து சாடி வரும் கங்கணா ரணாவத் இது தொடர்பாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
» உயிருக்கு ஆபத்து: சீனு ராமசாமி ட்வீட்டால் பரபரப்பு
» திருமணத்துக்கு மறுத்த இந்தி சின்னதிரை நடிகைக்கு கத்திக்குத்து: தயாரிப்பாளர் கைது
''திரைத்துறை என்பது இந்த தேசத்தின் கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு வைரஸ் மட்டுமல்ல. சுற்றுச்சூழலுக்கு அழிவையும் நாசத்தையும் ஏற்படுத்தும் ஒன்று. பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களின் அருவருப்பான, இழிவான, பொறுப்பற்ற நடத்தையைப் பாருங்கள் பிரகாஷ் ஜவடேகர் சார்! தயவுசெய்து உதவுங்கள்''.
இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.
மேலும், இந்தப் பதிவுடன் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் ட்விட்டர் பக்கத்தையும் கங்கணா டேக் செய்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் மரணம் முதல் போதைப் பொருள் விவகாரம் வரை பாலிவுட் பிரபலங்களைக் கங்கணா விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.