என் உயிருக்கு ஆபத்து என இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார். இதனால் பரபரப்பு உருவாகியுள்ளது.
'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை', 'கண்ணே கலைமானே' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு முத்தையா முரளிதரன் பயோபிக்கான '800' படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அப்போது, அதில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று முதல் நபராக வேண்டுகோள் வைத்தவர் சீனு ராமசாமி. 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி என்பது நினைவுகூரத்தக்கது.
சீனு ராமசாமியைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுக்கவே, '800' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியனார். இதைத் தொடர்ந்து சர்ச்சை முடிவுக்கு வந்தது.
சில தினங்களாகவே பல்வேறு படங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து வந்தார் சீனு ராமசாமி.
திடீரென்று இன்று (அக்டோபர் 28) காலை இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில், "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தொலைபேசி வாயிலாகக் கேட்ட போது, வீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சீனு ராமசாமி வெளியிட்ட ஆடியோ பதிவுகளில், "இது எந்தவொரு அரசியல் கட்சி தொடர்பான எதிர்வினையோ, விமர்சனமோ கிடையாது. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எல்லோருக்கும் பொதுவானவன். ஒரு தமிழ் ஆர்வலர். அவ்வளவுதான். அதனால், இது எந்தவொரு அரசியல் கட்சி சம்பந்தப்பட்டதும் அல்ல. சில விஷயங்களைப் பேச விரும்புகிறேன். அவ்வளவே" என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மணித்துளிகளில் சீனு ராமசாமி பத்திரிகையாளர்களைச் சந்திக்கவுள்ளதால், என்ன பிரச்சினை என்பது தெரியவரும்.