'சூரரைப் போற்று' தன் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், விமானப்படை தரப்பிலிருந்து தடையில்லாச் சான்றிதழ் வருவது தாமதமானதால் இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
'சூரரைப் போற்று' வெளியீடு தாமதம் தொடர்பாக, தனது வருத்தத்தை அறிக்கையாக வெளியிட்டார் சூர்யா. அதனைத் தொடர்ந்து சில தினங்களில் படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்தது
இந்நிலையில் 'சூரரைப் போற்று' படத்தின் ட்ரெய்லர் நேற்று (அக். 26) வெளியானது. ட்ரெய்லரில் நவம்பர் 12-ம் தேதி 'சூரரைப் போற்று' திரைப்படம் வெளியாக இருப்பதை, அமேசான் ப்ரைம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தீபாவளி வெளியீடாக 'சூரரைப் போற்று' வரவிருப்பதால் சூர்யாவின் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து சூர்யா கூறியுள்ளதாவது:
''எனக்கு மிகவும் விஷேசமான மற்றும் என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் 'சூரரைப் போற்று' . இப்படத்தின் வாயிலாக, நாம் உண்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்பட்டால் நம் கனவுகளை நனவாக்குவதை எதுவும் தடுக்க முடியாது என்ற செய்தியை சொல்ல விரும்புகிறோம். ரசிகர்கள் தங்கள் நிலையான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று நம்புகிறோம்''.
இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.
'சூரரைப் போற்று' ட்ரெய்லருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அபிஷேக் பச்சன், மாதவன் எனப் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். வெளியான சில மணி நேரங்களிலேயே ட்ரெண்டிங்கில் முதல் இடத்தையும் இந்த ட்ரெய்லர் பிடித்துள்ளது.