'இந்தியன் 2' அப்டேட்: அதிருப்தியில் ஷங்கர்?

By செய்திப்பிரிவு

'இந்தியன் 2' படம் தொடர்பாக ஷங்கர் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவல் தவறானது என்று தெரியவந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.

கமலுக்கு மேக்கப் பிரச்சினை, படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, கரோனா அச்சுறுத்தல் எனத் தொடர்ச்சியாக இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டன. கரோனா அச்சுறுத்தலுக்குப் பின் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

'இந்தியன் 2' படத் தாமதத்தால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் கமல். இதனால் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக ஒரு கடிதம் எழுதியிருப்பதாகவும் செய்தி வெளியானது.

இது தொடர்பாக விசாரித்தபோது, லைகா நிறுவனம் - கமல் - ஷங்கர் மூவருக்கும் இடையே எந்தவித பிரச்சினையுமே இல்லை என்கிறார்கள். 'இந்தியன் 2' படப்பிடிப்புத் தளத்தில் குறைந்தது 300 பேர் வரை பணிபுரிவது போலத்தான் காட்சிகள் உள்ளன. ஆனால், 100 பேருடன்தான் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் 'இந்தியன் 2' படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்காகப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது. மேலும், 'இந்தியன் 2' படத்துக்காக கமல் மேக்கப்பிற்கு வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வரவேண்டும். இதனால் படப்பிடிப்பு தொடங்குவதற்காக அனைத்துத் தரப்பிலுமே தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கமலைக் கூட சந்தித்துப் பேசியுள்ளனர். ஆகையால், 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE